பெற்ற அன்னையும் சொந்தங்கள் அல்லர்
உற்ற தந்தையும் உறவினர் அல்லர்
கணவன் மனைவி ஆன மக்களும்
கணமேனும் முன்னாளில் அறிந்த தில்லை.
செம்மண் நிலத்தில் பாய்கின்ற மழைநீர்
செந்நிறம் பெற்றுச் செல்கின்ற தன்றோ,
மஞ்சட் களியில் ஓடிய மழை நீரும்
மஞ்சள் நிறமே பெறுகின்ற தன்றோ.
நிறமற்ற மழை நீர் நிலத்தில் ஓடி
நிலத்தின் தன்மை பெறுவது போல
நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்ததால்
நெருக்கம் கூடிட நீடித்த இன்பமாம்.
நிலமகளைப் பெண்ணாய் உருவகித்து
நிலத்தி வீழும் மழை நீரை ஆணாயேற்று
காதலின் இறுக்கத்தை கவிதையாக்கிய
கவிஞரின் கவிநயம் எத்துணை நன்று.
குறுந்தொகை என்னும் சங்க நூலில்
ஒருகவி பாடிய ஒல்காப் புலவன்
செம்புலப் பெயல் நீர் உவமையால்
செம்மை செய்தான் தமிழ்க் காதலை.