மழை நீர் போல
மனிதன் வாழ்ந்தால்
உலகில் ஏதும்
பிரச்னைகள் வாரா!
வயல் தோட்டம்
வரப்பு வீடென்று
எதனைப் பற்றியும்
அதற்கில்லை கவலை!
வேண்டியவன் வேண்டாதவன்
தெரிந்தவன் தெரியாதவன்
விரும்புவன் விரும்பாதவன்
என்பதெல்லாம் இல்லையதற்கு!
வானில் மேகம்
வகையாய்க் கூடி
குளிரும் இடத்தில்
கொட்டும் மழையாய்!
இதமாய்ப் பெய்தால்
இவ்வுலகம் தழைக்கும்!
அதிகமாய்ப் பொழிந்தால்
அனைத்தும் மூழ்கும்!
ஆனாலும் மழைநீர்
அதைப் பற்றியெல்லாம்
எந்த நிலையிலும்
எண்ணிப் பார்ப்பதில்லை!
எண்ணுவதே யிங்கு
எல்லாக் கெடுதலுக்கும்
வழிகோலும் என்பதை
வகுத்தோர் அறிவர்!