ஆவிற்கு இழைத்திட்ட அநீதிக் காக
அரும்புதல்வன் உயிர்கொடுத்து நீதி காத்தும்
நாவிற்சொல் தவறிட்ட தவறுக் காக
நறும்உயிரைத் தானீந்து நீதி காத்தும்
கோவிலுக்குள் அமர்ந்தருளைப் பொழிந்து காக்கும்
கோவாக இருந்திட்ட ஆட்சி பீடம்
பாவிகளின் பலிபீட மாக மாறிப்
பழிசுமந்த பீடமாக ஆன தின்று !
பசிவந்தால் பத்தும்போம் என்ப தைப்போல்
பதிவியாசை வந்தாலும் போகும் என்னும்
அசிங்கத்தை அரங்கேற்றித் தமிழ கத்தின்
அரும்பெயரைப் பெருமையினைத் தாழ வைத்தார் !
பசித்தாலும் புல்தின்னாப் புலிதாம் என்னும்
பழக்கத்தை விட்டின்று நரக லையும்
புசித்திடுவோம் அரியணையில் அமர்தற் கென்று
புவிதனக்குக் காட்டிட்டார் உறுப்பி னர்தாம் !
கொள்ளையினை அடித்ததற்குத் தண்ட னைதாம்
கொடுத்தபின்பும் கொள்ளையினை அடிப்ப தற்கே
கொள்ளையராய்க் கூடியுள்ளார் ஓரி டத்தில்
கோட்டையிலே கோலோச்சும் பதவிக் காக !
கள்ளராக மாறிவிட்ட சட்ட மன்ற
கயவரினை ஓடஓட விரட்டி விட்டே
உள்ளத்தில் தூய்மைதொண்டு கொண்டி லிங்கும்
உத்தமரை அரியணையில் அமர வைப்போம் !