தாலாட்டுப் பாடியென்னைத் தலையெடுக்க வைத்த அன்னை
பாலூட்டி வளர்த்து என்னைப் பலசாலி ஆக்கியவள்
ஒற்றைப் பெண்ணாய் தன் தாய்க்குப் பிறந்த அவள்
ஏழாவதாய் என்னை ஈன்றெடுத்து இனிதாய் வளர்த்தாளே!
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் என் தாயே
உந்தன் தாலாட்டு என் உதிரத்தில் கலந்ததனால்
அந்தக் காலத்தில் அதிரடியாய் மடை வெள்ளம்
உக்கிரமாய்ப் பாய்வது போல் உள்ளமெல்லாம் உன் நினைவு!
வேளைக்குப் பத்துப் பேர் வெறும் வயிற்றுப் பசியாற
ஓயாது உலை வைத்தே ஓடாகிப் போனவள் நீ!
அம்மியிலும் ஆட்டுக் கல்லிலும் அடுப்பிலும் உழன்றே நீ
உன் வாழ்க்கை சரித்திரத்தை உரித்தாக்கினாய் எங்களுக்காய்!
பேத்தியாய் எனக்கு நீ பிறந்து வந்தால் உன்காதில்
தாலாட்டுப் பாடியுன்னைத் தக்கபடி தூங்க வைப்பேன்!
வாலாட்டி நான் செய்த வம்பு தும்பையெல்லாம்
சீராட்டினாயில்லை!சிரித்தே அவை மறந்தவள் நீ!
அன்னையே உனக்காக ஆத்மா இவன் காத்திருப்பான்
உந்தன் தியாகத்தை உள்ளமெங்கும் ஏற்றிருப்பான்
பிறவி முடியுமென்னால் விரைவில் பிறந்தே வந்து விடு
உனக்குத் தாலாட்டுப் பாடி உறைந்திடுவேன் அமைதியாக!