இன்றைய தாலாட்டு: கவிஞர் டி.கே. ஹரிஹரன்

எப்படித் தாலாட்ட......
எல்லாம் மறந்து போயிற்றே...
அம்மா இருந்தவரை
அழகழகாய்ப்பாடுவாள்
பிசிறடிக்கும் குரலில்.....

தூளி சொர்க்கமாகும்
தூக்கம் இன்பமாகும்.
அதெப்படிக் கச்சிதமாய்
அளவாய் ....
அந்த எட்டடிக் குச்சுக்குள்
எப்படி ஆட்டத்தெரிகிறது
அம்மாவால் தூளியை
அழகாய்.....

பசியோடிருக்கும் நாளிலும்
பாட்டுகள் தவறாது
பாலூறும் காம்பில்
வாயூறும் அமுதோடு.

நைந்து போன சேலைதான்
நல்ல சுகம் தரும் தூளியாய்
அம்மாவின் வாசம்
அருகினிலே வீசும்....

பாசந் தருவதில்
கஞ்சத்தனம் காட்டியதில்லை
சட்டியில் இருந்தாலும் சரி
இல்லையானாலும் சரி...
அம்மா.....அம்மா  தான்.
அப்பாவோ தூளிபிரித்து
அளவாய் எட்டிப்பார்ப்பதோடு சரி.

அத்தனை குழந்தைகளுக்கும்
அம்மாவின் தாலாட்டு வாய்த்தது
அம்மாவிற்கு அமையவேயில்லை
முதுமையில் தாலாட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com