இன்றைய தாலாட்டு: கோவை புதியவன்

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ"

சூரிய அஸ்தமனத்தில்
உதித்த நட்சத்திரமே!
சாதிக்க வேண்டி
சாமத்தில் பூத்தவளே
கண்ணுறங்கு

வானம் பார்த்து ஏமாந்து
கருகிப்போன தோப்புக்குள்ளே
விதையாகி விழுந்தவளே
கண்ணுறங்கு

நாக்கு நனைக்க 
தண்ணியில்லா வீட்டுக்குள்ளே
நதியாகி வந்தவளே
கண்ணுறங்கு

கால் வயிறு கஞ்சிகூட
கனவாகி போகையிலே
அமுதமாகி வந்தவளே
கண்ணுறங்கு

சாராயம் மணக்கும் மண்ணிலே
சாமந்தியா மலர்ந்தவளே
கண்ணுறங்கு

சாதி சண்டை ரத்தம் குடிக்கும்
மிருகத்தின் நடுவே
கடவுளாய் வந்தவளே கண்ணுறங்கு

போர்க்களமே வாழ்க்கை
பார்க்கலாம் ஒரு கைணு
பாய்ந்து வந்தவளே கண்ணுறங்கு

நிச்சயம் ஒரு நாள் விடியும்ணு
நிரந்தர நம்பிக்கையோடு
பிறந்த கண்மணியே
கண்ணுறங்கு

"ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com