தால் ஆட்டி
தாலாட்டிய- என்
தாயைப் போல் யாருளர்?
தால் ஆட்டி
தாலாட்டில்- என் துயில்
தாகம் தீர்த்தவர் யாருளர்?
தெய்வத்தைக் கூடப் பிள்ளையாக்கி
பாடியது எங்கள் குலம்
அந்தப்பிள்ளைத் தமிழில்
அன்பைச் சுமந்து
இன்பத்தில் திளைத்து
இதயம் நனைத்ததும்
இன்பத் தமிழ்க் குலம்- எனை
ஈன்ற குலத்துக்கு, தேன்
ஈயாய் பயணிக்கும், மென்னிதயம்
ஈர்க்கும் வகையால்
மகிழ்ச்சியைத் தருவது
நகை ஒன்று தான் – அந்த
நகைக் கூட்ட
குழவி மொழி
குழறக் கேட்பது தான்.
குழறும் முன்பு
தாலை ஆட்டிடும்
தாலாட்டு- உலகத்
தமிழ் வீட்டில்
தாலாட்டுப் பாடாத
தாயாரும் உளரோ ?