அழகான தோட்டத்தில் மணத்தை வீசி
அன்றலர்ந்த மல்லிகைநான் ! மாலை யாக்கிப்
பழகுதமிழ் பக்திமாலை சூடிக் கொண்டு
பாங்காகக் கோயிலுக்குள் அமர்ந்த வாறு
வழங்குமருள் இறைவன்தன் அடிவ ணங்கி
வழங்கிடுவர் எனக்கொடியில் காத்தி ருக்க
முழங்குயிசை வழிபாடு நடந்த போதும்
முன்வந்து யாருமென்னைப் பறிக்க வில்லை !
அண்ணல்நம் காந்தியைப்போல் தெரசா போல
அன்புதனைத் தன்வழியாய் அமைத்துக் கொண்டு
தொண்டொன்றே குறிகோளாய் மக்க ளுக்குத்
தொடர்ந்துபணி ஆற்றுகின்ற நல்ல வர்க்கு
மண்மீது பாராட்டு செய்யும் போது
மணக்கின்ற எனைப்பறித்து மாலை யாக்கிப்
பண்ணிசைக்க அணிவிப்பர் எனவி ருக்கப்
பட்டாடை அணிவித்தார் எனைவி டுத்தே !
திருமணங்கள் பாராட்டு விழாக்க ளென்று
தினம்பலவாய் நடந்தபோதும் எனைப்ப றித்துத்
திருவாக மாலையாக்கி அணிவிக் காமல்
திருடனாகக் கயவனாகக் குண்ட னாகப்
பெருந்தொல்லை மக்களுக்குச் செய்து செய்து
பெரும்பழியைச் சுமந்தவனின் பிணத்தின் மீது
நறுமணந்தான் வீசுமென்னைப் பறித்து வந்த
நரகல்மேல் இட்டதுபோல் இட்டார் ஐயோ !