கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளிகள்
காதலரை எச்சரிக்கை செய்கின்றன;
தற்கொலை என்றும் தீர்வல்லவென்றும்,
தன்னலமற்ற காதலே வெல்லுமாம் என்றும்.
இல்லாமை என்றும் இழிவல்ல வென்றும்,
இடைவிடா முயற்சி இல்லாமையே தவறென்றும்;
விபத்துகள் நேர்வது விதிவசம் அன்றன்றென்றும்
விதிகளை மீறும் செயலே ஆபத்தாமென்றும்.
தோல்வி என்றும் நிரந்தர மன்றென்றும்
துணிவுடன் எதையும் நோக்குக வென்றும்;
வெற்றிப் படிகள் அருகிலே என்றும்
விழித்துப் பார்த்தால் தெரியுமாம் என்றும்.
கல்லறைப் பூக்கள் சொல்வ தெல்லாம்
உள்ளிருப் போரின் அனுபவப் பகிர்வாம்,
கோழையாய் இருந்ததினி போதுமென்று
கூவுமாம் அப்பூக்கள் கண்ணீர் சிந்தி.