கவிதைமணி
கல்லறைப் பூவின் கண்ணீர் துளிகள்: கவிஞர் கே. அசோகன்
கடவுளின் காலடி தன்னில்
விழுந்திடுமா இல்லை!
கல்லறை மேலே விழந்திடுமா
கவலையில்லை என்றனுக்கே!
மலர்வதும் மணப்பதும்
எனக்கு இயல்புதான்!
மலர்ச்சியில் சிலிர்ப்பும்
மணத்தினில் லயிப்பும்
எனக்கான இயல்புதான்!
ஆயுள் குறைவெனினும்
அழகாய் மலர்வது இயல்பு
வயிற்றில் அடித்தவனின்
கல்லறையிலும்…..
வாய்விட்டு சிரித்திடுவேனே!
காயத்தை மெய்யென்று
காலத்தைக் கடத்திடும் மனிதா!
காயமானபின் உன் கல்லறைமீது
நிற்பதும் எனக்கு மலர்ச்சிதான்!
ஓயா புறம்பேசி ஊரையடித்து
ஓராயிரம் இடம் நீ-சேர்த்தாலுமே
சாயுமிடம் இந்த கல்லறையே
சாமியும்---- ஆசாமியும்
சரிநிகர் சமானமடா
"கல்லறைப் பூக்களான” எங்களுக்கே!