தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர்
தன்னலமற்ற பெரு வாழ்வு வாழ்ந்து சிறந்தவர் !
வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் உலக ஆசான்
வள்ளுவர் வாக்குப்படி அறவாழ்வு வாழ்ந்தவர் !
வான்மழை போல பிறர் பயனுற வாழ்ந்தவர்
வையகம் போற்றும் வண்ணம் வாழ்ந்தவர் !
உதவி என்று யார் வந்து கேட்டபோதும்
உடன் தட்டாமல் உதவிய நல்லவர் !
வருடா வருடம் குருதிக் கொடை வழங்கியவர்
வயதுக்கு இளையோர்களையும் மதித்தவர் !
ஒருபோதும் நேரத்தை விரயம் செய்யாதவர்
ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தம் ஆக்கியவர் !
மனிதாபிமானமும் விலங்காபிமானமும் உள்ளவர்
மனிதம் தாண்டி விலங்குகளையும் நேசித்தவர் !
உடன்பாட்டுச் சிந்தனையால் உயரம் தொட்டவர்
ஒருவரோடும் ஒருபோதும் சண்டை இடாதவர் !
கோபம் என்றால் என்னவென்றே அறியாதவர்
கள்ளம் கபடமில்லா வெள்ளையுள்ளம் பெற்றவர் !
தன்னைப் போலவே பிறரையும் நேசித்தவர்
தன்னலம் குறைத்து பொதுநலம் பேணியவர் !
உரக்கப் பேசி யாரும் பார்த்ததே இல்லை
ஊரே போற்றும்படி உன்னதமாக வாழ்ந்தவர் !
யாருக்கும் தீங்கு மனதாலும் நினைக்காதவர்
யார் வந்து கேட்டாலும் தட்டாமல் உதவியவர் !
அன்பு ஒன்றை மட்டுமே என்றும் தனது
ஆயுதமாக வைத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் !
வன்முறையை எங்கும் எதிலும் விரும்பாதவர்
வன்முறையாளர்களுக்குப் புத்திப் புகட்டியவர் !
சாதி சமயப் பற்று உள்ளத்தில் இல்லாதவர்
சகோதரராக அனைவருடனும் பழகியவர் !
பகைவர் என்று யாரும் இல்லாதவர்
பண்பில் இமயமாக உயர்ந்து நின்றவர் !
நல்ல மனிதரின் மரணத்திற்காக வடித்தது
நாள் முழுவதும் கல்லறைப் பூ கண்ணீர்த்துளி !