கல்லறைப் பூவின் கண்ணீர்த்துளி   ! கவிஞர் இரா .இரவி !

தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர் 
தன்னலமற்ற பெரு வாழ்வு வாழ்ந்து சிறந்தவர் !

வாழ்வாங்கு வாழ்ந்த  நல்லவர் உலக ஆசான் 
வள்ளுவர் வாக்குப்படி அறவாழ்வு வாழ்ந்தவர் !

வான்மழை போல பிறர் பயனுற வாழ்ந்தவர் 
வையகம் போற்றும் வண்ணம் வாழ்ந்தவர் !

உதவி என்று யார் வந்து கேட்டபோதும் 
உடன் தட்டாமல் உதவிய நல்லவர் !

வருடா வருடம் குருதிக் கொடை வழங்கியவர் 
வயதுக்கு இளையோர்களையும் மதித்தவர் !

ஒருபோதும்  நேரத்தை விரயம் செய்யாதவர் 
ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தம் ஆக்கியவர் !

மனிதாபிமானமும்  விலங்காபிமானமும் உள்ளவர் 
மனிதம் தாண்டி விலங்குகளையும் நேசித்தவர் ! 

உடன்பாட்டுச் சிந்தனையால் உயரம் தொட்டவர் 
ஒருவரோடும் ஒருபோதும் சண்டை இடாதவர் ! 

கோபம் என்றால் என்னவென்றே அறியாதவர் 
கள்ளம் கபடமில்லா வெள்ளையுள்ளம் பெற்றவர் !

தன்னைப் போலவே பிறரையும் நேசித்தவர் 
தன்னலம் குறைத்து பொதுநலம்  பேணியவர் !

உரக்கப் பேசி  யாரும் பார்த்ததே இல்லை 
ஊரே போற்றும்படி உன்னதமாக வாழ்ந்தவர் !

யாருக்கும்  தீங்கு மனதாலும் நினைக்காதவர் 
யார் வந்து கேட்டாலும் தட்டாமல் உதவியவர் !

அன்பு ஒன்றை மட்டுமே என்றும் தனது 
ஆயுதமாக வைத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் !

வன்முறையை எங்கும் எதிலும் விரும்பாதவர் 
வன்முறையாளர்களுக்குப் புத்திப்   புகட்டியவர் !

சாதி சமயப்  பற்று உள்ளத்தில் இல்லாதவர் 
சகோதரராக அனைவருடனும் பழகியவர் !

பகைவர் என்று யாரும் இல்லாதவர் 
பண்பில் இமயமாக உயர்ந்து நின்றவர் !

நல்ல  மனிதரின் மரணத்திற்காக வடித்தது 
நாள் முழுவதும் கல்லறைப் பூ கண்ணீர்த்துளி !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com