எனக்கும் சேர்த்து சுவாசித்த
அம்மாவின் கருவறை கத்தரித்த தருணம்..
காற்றிடம் சுவாசம் பழக வாய்விட்டு அழுது
சுவாசிக்க தொடங்கிய பொழுது
தாலாட்டும் தொட்டில் இறங்கி
மண்ணில் புரண்டு மழலையில்
உழன்ற தருணம்
பால்யத்தில் கல்வி சாலையில் நுழைந்து
வரிவடிவங்களை மூளையில் ஏற்றிய வேளை
பருவத்தின் புதிர்களுக்கு ஒவ்வொரு பூக்களாய்
வந்து விடைசொல்லும் வாலிபப் பிராயம்
துணையோடு கரம் பிடித்து
சமூகத்தின் தனிப்பிரதிநிதியாய்
இயங்கும் இல்லறம்
என்னைப் போல் இன்னொரு பால்யத்தை
வார்த்தெடுக்கும் ஜனனம
வளர்த்து முடித்து வாழ்வில் அமர்த்தி
ஒரு வலியற்ற சாவிற்காக காத்திருக்கும் வாழ்வில்
எத்தனை மறுபிறவிகள் இதுபோல் கிடக்கின்றன வழியெங்கும்...
நான் ஏன் இந்த வாழ்வை சுத்தமாக துடைத்தெறிந்த
இன்னொரு மறுஜென்மம் பற்றி சிந்திக்கப் போகிறேன்