செக்குப் பாதையில்
காலங்காலமாய்க்
கால்கள் ஓடிச்
சிறைபட்டன
சின்ன வட்டத்துக்குள்!
புதிய காற்று
புதிய வாசம்
புதிய நேசம்
புதிய வெளிச்சம்
எதையும் உள்விடாத
இருட்டுச் சுவருக்குள்
மூச்சுத் திணறி மூச்சுத் திணறி
வாடுது ஆண்டாண்டாய் உயிரொன்று
நிலவைப் பார்க்காமல்
சபித்துவிட்டுப் போகின்றன
இரவுகள்
காற்று வராத
கண்ணாடிப் பெட்டிக்குள்
அவிந்த விளக்காய் இருப்பதில்
யாருக்கென்ன லாபம்?
பஞ்சவர்ணச் சிறகுகள்
படபடத்து ஆவதென்ன
தொங்கவிடப்பட்ட கூண்டுக்குள்
கைவிலங்கு கால்விலங்கு என்பதுபோல்
மனவிலங்கைப்
போட்டுக்கொண்டது யார்?
மாய விலங்கு உடைந்து தெறிக்கும்
உன்னை நம்புவதால் மட்டுமே!
அப்புறம் பார்
விடுதலை தேசத்தில்
மூவாறு றெக்கைகளும்
ஈராறு கால்களும் கொண்டெழும்
புரவியாய் நீ