தோட்டத்தில்
கிள்ளி எறிந்துகொண்டிருந்தான்
தளிர்களை ஒருவன்
பெண்ணைப் பழித்தபடி
அழகிய பெண்ணின் ஓவியத்தில்
தார்பூசிக் கொண்டிருந்தான்
பெண்ணின் வயிற்றில்
பிறந்த ஒருவன்
வீதியை
விழி பார்க்கக் கூடாதாம்
மூடிய சன்னலுக்குள் அடைத்தான்
முழுநிலவை
நங்கையவள்
நகை அணிய இசைந்தவன்
புன்னகை அணியக் கூடாதெனப்
புதுவிலங்கு மாட்டினான்
கல்விக் கூடத்தை மூடி-
கலவிக் கூடத்துக்கு வாடி
என்றான்
மெய்ப்புலியை விரட்டியவள்
பொம்மைப் புலிக்கு
அடங்கி இருந்தாள் நேற்றுவரை
இன்றைய
நவீனப் பெண்ணுக்குப்
பதினாறு கைகள்
அனைத்துக் கைகளிலும்
ஆயுதங்கள்