எழுந்துவிடு பெண்ணே!
மழலை முதல்
முதுமைப் பருவம்வரை
போராடியே வெற்றி காண்போம்!
உலக ஆணாதிக்கப் பாலியல் தொல்லையிலே
இன்னமும் ஏன் முடங்கி பயப்படுகிறாய்!
தற்காப்புக் கலையொன்றைக்
கற்றுவிடு!
பாலியல் தொல்லை பேய்களை
விரட்டிவிடு!
கரையில்லா கல்வியை
நீயும் கற்றுவிடு!
பெண்களைக் காக்க
புது சட்டங்களைப் புகுத்திவிடு!
ஒருவனுக்கு ஒருத்தி என்றே
வாழ்ந்துவிடு!
அதை உலகெங்கும் பரப்ப
வழி செய்திடு!
புதுமைகள் படைத்து
சாதித்துக் காட்டி
வீரமங்கையாக உலா வர
இன்னமும் ஏனம்மா தயக்கம்!
வீரத்தின் விளைநிலமாக
கருப்பையில் வீரமங்கை
உதிக்க தடையும் ஏன் போட்டாயோ!
வரதட்சணை நெருப்புகளுக்கும்
பாலியல் தொல்லை பேய்களிடம்
இருந்து காக்கத்தான் கருவிலே
வீர மங்கையினை
அழிக்க முனைந்தனையோ!
சிங்கார மழலையிலே
சிந்தும் எச்சில் உதடுகளில்
மழலை அமுதம்
கேட்க மனமில்லையோ!
கண்ணகி வாழ்ந்த இம்மண்ணிலே
கல்பனாசாவ்லா தந்த ஊக்கத்திலே
புறநானூறு தந்த வீரக் கொடையிலே
மேடம்கியூரி அறிவிலே
ஜான்சிராணி ஒத்த மகளினை
வீர மங்கை பெற்றுத்தான்
வாழ்ந்து நீயும் காட்டம்மா!