அன்பே உந்தன் நிழல்தேடி
ஆன்மாவை நான் வளர்க்கின்றேன்!
கோடிப் பெண்கள் பூவுலகில்
கொஞ்சும் அழகுடன் திரிந்தாலும்
பாடி அவர்கள் பறந்து மகிழ்ந்து
பஞ்சுப் பொதியாய் அலைந்தாலும்
நெஞ்சம் நிறைப்பவள் நீதானே!
நினைவில் நிற்பவள் நீதானே!
கஞ்சத் தனமாய் நான் என்றும்
கனவில் நிறுத்துவேன் உனைத்தானே!
வேண்டாம் எனக்கு ரதி ரம்பை
வேண்டும் உந்தன் நிழல்தானே!
ஒளிரும் மதியில் உன்முகத்தை
ஒட்டி வைத்ததும் எப்படியோ?!
மிளிரும் வானின் மேகங்களில்
மிளிர்வது உந்தன் ஆடைகளோ?!
பெய்யும் மழையில் உன் வதனம்
பெருமையாய்த் தெரிவது எங்ஙனமோ?!
காலைக் கதிரில் உன் உருவை
கண்கள் காண்பது நிஜந்தானே!
மாலைக் கதிரவன் மலைமுகட்டில்
மறைவதும் உன்னிடம் தோற்றுதானோ!
ஏழை எனக்கு உன்நிழலை
எப்பொழுது நீ தருவாயோ?