நிழல் தேடி உன் நடைப்பயணம் நிஜத்தைத்
தொலைத்த பிறகா ? இது கண் கெட்ட பின்
சூர்ய நமஸ்காரம் போல அல்லவா !
விளை நிலத்தை நீ கூறு போட்டு விற்றது நிஜம் !
மீதம் இருக்கும் விளை நிலத்திலும் மீத்தேன்
வாயு தேடி ஓயாமல் உன் மண்ணை நீ புண்ணாக்குவதும்
நிஜம் !....நிலத்தடி நீரையும் கடைசி சொட்டு வரை
உறிஞ்சி உன் மண்ணை நீ ஒரு பாலைவனம்
ஆக்குவது நிஜம் !
நீர் வற்றா ஆற்றுப் படுகையிலும் மணல் அள்ளி
ஒரு ஆற்றின் ஓட்டத்தையே நீ தடுப்பதும் நிஜம் !
அடுக்கு மாடி கட்டிடக் குவியலுக்காக மரமும்
செடியும் வெட்டப்பட்டு தரையில் குவிக்கப்பட்டது நிஜம் !
மழை நீர் நிரம்பும் ஏரி குளத்தில் கல்லும் மண்ணும் சேர்த்து
கட்டிடம் பல நீ கட்டியதும் நிஜமே !
தன் வினை தன்னையே சுடும் ... உன் வினை
உன்னை சுடும் உண்மை உனக்கு புரியாதா?
விண்ணில் வீடு கட்ட நினைக்கும் நீ உன் சொந்த
மண்ணை நேசித்து அதை கட்டிக் காக்க முடியாதா ? சற்றே
யோசிக்க வேண்டும் நீ மனிதா ! நிஜம் இல்லையேல்
நிழலும் இல்லை ! நிஜத்தைத் தொலைத்து விட்டு
நிழலை நீ தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை !