அனல் பறக்கும் ஆகாயமதில்
அலைந்து திரிந்த பறவைகளோ
இளைப்பாற நிழல் தேடி
இயலாமல் மாளுதடா
நெருப்புமிழும் நிலம்தனில்
நிலைகுலைந்த விலங்குகளோ
களைப்பாற நிழல் தேடி
காணாமல் சுருளுதடா
ஓடி ஓடி உழைத்ததனால்
வாடியவன் பூவுடலோ
ஒதுங்க நிழல் தேடி
வழியிலேயே வீழுதடா
திசைமாறிய மேகங்களும்
திருந்துவான் மனிதனென
சிறுசிறு மழைத்துளியாய்
சில நேரம் இரங்குதடா
காடு மரமெல்லாம்
கடுகளவும் மிச்சமின்றி
கபளீகரம் நீ செய்துவிட்டால்
உன் நிழலும் உனைப் பார்த்து
உக்கிரமாய் சிரிக்குமடா
உன்னுதிரம் வற்றும் நாளில்
நித்திய நிழல் தேடி
இறைவனிடம் கெஞ்சினாலும்
நீ செய்த பாவம் மட்டும்
நிழலாய் உன்னைத் தொடருமடா!