எங்கோ ஒரு மலையில் பிறந்து
தவழ்ந்து தவழ்ந்து நம் ஊர்வரை
வந்து..வரும் வழியெல்லாம் பசுமையாக்கி
பாகுபாடின்றி எல்லோருக்கும்
சமமாய் உதவி
நம்முள் ஒன்றோடு ஒன்றாய் கலந்து
பின் சோகமாய் பிரிந்து
அழுது அழுது தூரம் சென்று
பிறந்த பயன் அடைந்து விட்டதாய்
எண்ணி
இறுதியில் சமுத்திரத்தில்
கலந்து
தனது வாழ்வை நிம்மதியாய்
முடித்துக் கொண்டது ஆறு அன்று..
ஊருக்கு ஒரு அணையில் மாட்டி
பிடித்து வைத்தவர் பிடியில்
கசங்கி
தான் முன்பு பயணித்த பகுதிகளில்
இருந்த மண்ணெல்லாம்
காசாக்கப்பட்டு முழுக்க
முழுக்க சுரண்டப்பட்டு
சாய நீரும் கழிவுகளும்
கணக்கின்றி கலந்து
தன் அடையாளம் இழந்து
வழியெல்லாம் வறண்டு
அழக் கூட கண்ணீரின்றி
உதவக் கூட முடியாமல்
உலகை விட்டு மெல்ல மெல்ல
ஆவியாகிக் கொண்டுள்ளது ஆறு
இன்று..
ஆறு ஆறாக இருந்த வரை
நீர் காசாகவில்லை
ஆறு ஆவியாகிப் போன பின்பு
நீரும் காசாகிப்போனது
ஆறும் இல்லாத
நீரும் இல்லாத
ஒரு நாள்
மனிதனை நெருக்கத்தான் போகிறது..
அன்று உணர்ந்து கண்ணீர்
விட்டாலும்
இன்று வரை ஆற்றிற்கு செய்த
துன்பத்திற்கு
தண்டனை நிச்சயம் கிடைக்கும்....