ஆறோடும் நீரோடும்; பெருமழை விஜய்

ஆறோடும் நீரோடும்' அருகில் நடந்த
அந்த நாட்கள் மறக்க முடியாதவை;மகிழ்வானவை!
ஏரோடும் காளையோடும் எம்மின விவசாயிகள்
ஊர்வலம் போவதைப் போல் ஒன்றாய் நடந்ததை
இன்றைக்கும் மனம் இனிதாய் அசை போடும்!
ஆற்றுக் கரையோரம் அதிகாலை நடக்கையிலே
ஊற்றுக் கண்களில் உறுமிக் கொந்தளிக்கும்
நீர்க்குமிழி போலே நிலையின்றிப் பரிதவித்து
மேலெழும்பிப் பயமுறுத்தி மின்னலாய் நிலைமாறும்
புனலின் அழகையினிப் போய்க் காண்பதெப்போது?!
இரண்டு கரைக்கிடையே இடித்தோடும் நீரினையே
அன்றைக்குப் பார்த்தது போல் இனியும் பார்ப்போமோ?!
நுங்கும் நுரையுமாய் பொங்கிப் பாய்ந்த ஆறென்று
பிள்ளைகளிடம் கூறினால் பெரிதாய்ச் சிரிக்கிறார்கள்!
அத்தனை மணலையும் அள்ளிவிற்றார் ஆட்சியாளர்
அண்டை மாநிலமோ அகத்தில் இரக்கமின்றி
உச்ச மன்றத் தீர்ப்பையும் உதாசீனப் படுத்துகிறது!
உண்மையாய் சிந்தித்தால் உச்சநீதி மன்றத்தை
மீறும் அரசுகளை வீட்டிற் கனுப்ப வேண்டும்!
மோடி அரசோ வாய்மூடி மௌனியாய் 
நீண்ட நாட்களாய் நிசப்தம் காக்கிறது!
ந திநீர் இணைப்பை நாளையே செய்வோமென்று 
மார்தட்டிச் சொன்ன எவரும் மறுபடி பேசியதில்லை!
அந்தக் காலத்தில் ஆறு உடைக்கும் போதெல்லாம்
ஐயனார் சாமிதான் அழகிய அவர் குதிரையில் 
விரைந்து  சென்று அனைவரையும் உஷார்ப்படுத்துவாராம்!
கோமவரத்தான் கொஞ்சமும் இரக்க மின்றி
கால்நடைகளை நித்தமும் கவர்ந்தே சென்றிடவே
ஊரார் ஒன்று சேர்ந்து உள்ள கால்நடைகளையெல்லாம்
கோயில் திடலில் கொண்டுவந்து கட்டிவிட்டு
ஊருக்குள் சென்று உறங்கி விட்டுக் காலையிலே
வந்து பார்த்தால் வாவ்! திருடர்கள் இரண்டு பேர்
கண்கள் குருடாகிக் கால்நடைகள் மத்தியிலே 
செய்வதறியாமல் திகைத்துப் பயந்தே கிடந்தார்களாம்!
பெருமழை ஐயனார் பெருமைக் குரியவர்தான்!
காவல் தெய்வங்கள் கை விடுவதில்லை ஊராரை!
ஆட்சியாளர்களோ அவர்கள் பற்றி எண்ணுவதில்லை!
ஐயனாரே நீர்தான் ஆற்றில் நீர் தளும்ப 
ஆவன செய்தே எம் அகங்குளிரச் செய்ய வேண்டும்!
நீரோடும் ஆற்றை எங்கள் சந்ததியினரும் பார்த்து மகிழ
ஐயனாரே நீர்தான் அருளி உதவ வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com