உறவாடும் ஒற்றைப் பறவையின்
ஈரமான சிறகுகளில் இன்னும்
அடங்கவில்லை பரபரப்பு
அது கடந்து வந்த பாதையில்
சோலை ஒன்று பாலையாகி இருந்தது.
மணல் கொள்ளையர் போல்
காகம் ஒன்று பள்ளத்தில்
கல் வீசிக் கொண்டிருந்தது.
லாரிகளின் நீரோடையில்
ஏனோ மர நிழல்கள் இல்லை
விழிப்பிற்கு முந்தைய
நல் கனவாய்
வந்து சேர்ந்த
இந்த ஆறோடும்
இந்த நீரோடும்
விடிய விரும்பா இரவாய்
முங்கிக் குளிக்கும்
அந்த ஏகாந்தப் பறவையின்
சிறகுகள் வடிக்கும் நீரில்
முழுமை கொள்கிறது
இந்தக் கவிதை