கால்களைத் தழுவி இதயத்தை நிரப்பிய
நீரலைகளால் மனமெல்லாம் நீர்மை,
அத்வைதத்தில் கரைதலும்
கலத்தல் நிமித்தமுமாக
காணாமல் போதலும் நிகழ்ந்தவாறு -
உன் ஞாபகங்களும்
என் செல்கள் தோறும்
மின்னூட்டுகின்ற நினைவலைகளை
நதிக்கரை தோறும் விழுந்து எழுந்து -
முத்துக் குளிக்க,
கிடைப்பதென்னவோ வெறும் சிப்பி தான்,
எனக்கு 'காலடி' தழுவிச் செல்லும்
மீன் குஞ்சுகள் அழுக்கை விழுங்கி -
புழுக்கம் போக்க, ஊசி முனை அளவும் இல்லாத
நேசம் -வழுக்கியது பாசமாய்
பாறையில், கடலின் முந்தானையாய்
நதியும் விரிய,
மணற் பரப்பெங்கும் நமது ஞாபகங்கள் |
சுண்டலும் கிண்டலும் மாறி
நாகரீப் பொட்டலங்களுக்குள்
நைட்ரஜன் வாயுவாய் அடைபட்ட ஆரோக்கியம்,
சித்திரை நிலவாய் இத்தரையில்
இரு கரையிலும் மரங்களுடே
வருடிய தென்றலாய், தேவதையின் தரிசனம்
பருகிக் களைத்து மணற் தட்டில்
படுத்த அருகம்புற்களாய் அலசும் நினைவுகள்
ஆலமரமாய் அகண்ட நினைவுகளில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தொங்கும் கனவு விழுதுகளின்
சுவட்டை ஒற்றி, சாயல் தந்த
சந்தோஷத்தில் நிஜம் மறுத்து
நினைவே சுகந்தமாய்
இக்கரையில் என் இருப்பு,
பூசை கொள்ள வா நேசம் இருந்தால்