வைகை நதிக்கரை ஓரத்தில்
வயதான மூதாட்டி
குழல் புட்டு விற்கையிலே
பிட்டுக்கு மண் சுமந்த
பெருமானின் திருவிளையாடல்
படரும் நினைவலைகளாக
என் மனதில் ஓடின !
யமுனை நதிக்கரை ஓரத்தில்
கண்ணன் வேடமிட்டு
குழலோடு சிறுவன்
கானம்பாடி வருகையிலே...
‘என் புல்லாங்குழல் இசை
இனியவை என்பார்கள்
உன் குரல் கேட்காதவர்கள்‘
அன்று
கண்ணன் ராதையிடம்
காதல்மொழி பேசியவை
என் காதில் ஒலித்தன !
பாயும் கங்கை நதிக்கரையில்
பசித்து நிற்கும் வேளையிலே
பாமரன் தேனும் தினைமாவும்
புன்னகையுடன் கொடுக்கையிலே...
பால் பழம் தேன் ராமனுக்கு
கள்ளமில்லா குகன் வழங்கியது
உள்ளத்தில் ஓடம்போல் ஓடியது !