சுழித்தோடிய நதி இன்று
சுருங்கிப் போய் மூளியாகி
பார்க்க அவ லட்சணமாய்
பயன்பாடு ஏதும் இன்றி
கிடப்பதைப் பார்க்கும் போது
கிள்ளுது துயர் மனசை!
நதிதானே எம் வாழ்க்கை!
நாங்கள் அதன் நீர்கொண்டு
ஊரார் பசியாற்றும் உன்னதத்தை
கால விரயம் ஏதுமின்றி
கருத்துடனே செய்து வந்த
வரலாற்றை என்ன சொல்ல?!
நதியில் மணல் இருந்தால்
நன்னீராவது ஊறி வரும்!
அதனையும் எடுத்து விற்றார்!
அடுக்குகளாய் வீடு கட்டினார்!
நீரின்றி அவர்தம் வீட்டினுள்ளே
நிலையாக வாழ வியலுமோ?!
நதிகள் என்றும் புனிதங்கள்
நம்நல் வாழ்வின் அடித்தளங்கள்!
புனிதத்தைக் காத்திட வேண்டின்
புறப்படுங்கள் நதிகளை நோக்கி!
நினைவகலா நதிகள் தானே
நம் நெஞ்சத்தின் ஆழத்தில்!