பள்ளி பருவத்து ஞாபகங்கள் - மனக்
கண்ணின் முன்னாலே ஓடிடுதே !
துள்ளி வருகின்ற காவேரி - வீட்டுக்
கொள்ளைப் புறத்தோடு சென்றதுவே !
"தட்டுப் பாடாகும் தண்ணீர்" - எனத்
துளியும் படவில்லை அன்று !
கட்டுக் கடங்காத இன்பம் - நதிக்
கரையில் நின்றாலும் உண்டு !
ஆடி பதினெட்டு வந்தால்... - கையில்
ஆறு வகைசாதம் கொண்டு
கூடி ஒன்றாகக் கரையில் - நாம்
உண்ட பொழுதெல்லாம் வருமோ?
பெண்டிர் குளிக்க ஓர்கரையாம் ! - தாவி
நீச்சல் அடிக்க ஒருகரையாம் !
அண்டி வாழ்கின்ற மாடு.. ! - அவை
அழகாய் குளிக்க ஓரிடமாம் !
இன்று பார்க்கின்ற போதோ - வெறும்
மண்டிக் கிடக்கின்ற குப்பை !
குன்று போலாக எங்கும் - மணற்
குவியல் மட்டுந்தான் கண்டேன் !
நதியின் ஓட்டத்தை தடுத்தார் ! - அது
நமக்கே வினையென்றும் கண்டார் !
கதியே நீயென்று அதையே - இங்கு
கதறி அழைக்கின்றார் வருமா?