வெண்முகிலைக் காட்டி என்னுள்
வினாக்குறியினை எழுப்பினாய்.
பென்னம்பெரிய கற்பனைகளுடன்
என்னை பூபாளம் பாட வைத்தாய்.
பவித்திரமாய் காணப்பட்ட உன்
மேனியில்தான் எத்தனை புன்மைகள்?
பொல்லாத கனவுகளுக்கு
மருண்டே நித்திரை தவிர்க்கிறேன்.
கழிவுகளையும், மரணித்த மக்களையும்,
மாக்களையும் அல்லவா சுமக்கிறாய்?
கனலாய் கனன்று
கண்ணீர் சிந்திக்கொண்டே
நகைக்கிறேன்...!
காதலியே, ஆழியை நோக்கி நீ
அன்னநடை பயிலுகிறாய்.
காலத்தின் கோலம்,
நினைவுகள் மட்டுமே
நித்தியமாகின்ற அவலம்.