முன்னைப் பழமையிலும்,
பின்னைப் புதுமையிலும்,
தொடர்ந்து கொண்டே யிருக்கும் -
வெல்லவியலா யுத்தம்.....!
அண்டமாய் விரிந்தும்,
அணுவுக்குள் கூர்ந்தும்,
எங்கும் வியாபித்து....
விழித்துக் கொண்டிருக்கும் போதும்,
ஆழ்ந்துறங்கும் போதும்,
எதையும் ஊடுருவும்
வல்லமையுடன், ஏமாற்ற முடியா,
அந்தக் கண்களுடன்!
சிறிதும் அயராமல்..
கொடூரமுமில்லாமல்,
அருட்பொழிதலுமில்லாமல்..
பயமுறுத்திக் கொண்டேயிருக்கும்!
எவ்வளவு போரிட்டாலும்
கூர்மழுங்கா அவை
இரும்பு மனத்தைக் கூடக்
காயப்படுத்தும்...
ஆழமாக..மிக ஆழமாக!
யுத்த களத்தை விட்டு
ஓடவும் விடாது,
ஓய்வெடுக்கவும் முடியாது!
இருக்கும் வரை மகா யுத்தமே!
உள்ளத்துக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும்,
அந்தக் கடங்கார
மனட்சாட்சியாம் கண்கள்!