ஆழ்மனதின் விருப்பமே
அகல திரைவிரிக்கும் கனவுகள்!
உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆசைகள்
ஒளிப்படமாய் வீழ்கிறது கனவுகளாய்!
ஒவ்வொருவருக்கு ஓர் கனவு உண்டு!
உன்னதமான அக்கனவு பகல் கனவாய்
பலருக்கு மாறுவதுண்டு!
பாதியிலே முடிந்து போகும் கனாக்கள்
பாவம் தற்கொலையில் உயிரிழக்கும் கனாக்கள்!
வறுமையின் கோரம்! வளர்ந்து வரும்
கனவை வாழ்விழக்க செய்து விடும்!
பெற்றோரின் விருப்பம் பிள்ளையின் கனவை
பிரித்து எறிந்து விடச்செய்யும்!
சுற்றத்தின் கேலி கூட துளிர்த்தெழும்
கனவுகளை கலைத்துவிடக் கூடும்!
கடலளவு துயரங்கள் துரத்துகையில்
கண்ணுக்கெட்டிய கனவுகள் கூட
மெய்ப்படாமல் போய்விடலாம்!
கனவுக்கு உரமூட்டி உயிர்பிக்கையில்
உலகம் உன்னை நிமிர்ந்து நோக்கும்!
உன் கனவை கலைத்து
பிறருக்கு வழிகொடுக்கையில்
உலகினில் நீ காணாமல் போய்விடுவாய்!
தடுமாற்றம் ஆயிரம் வந்தாலும்
பிடிவாதமோடு கனவுகளை
தற்கொலை செய்யாதிருப்பின்
விடிவெள்ளி உன் வாழ்வில்
விளக்கொளியாய் பிரகாசிக்கும்!