தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கிண்ணம்
முழு உளுந்து - கால் கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப்பொடி - சிறிதளவு
பழுத்த தக்காளி - 4
எண்ணெய் - தேவைக்கேற்ப
மாவில் கலப்பதற்கு தேவையான பொருட்கள்
சீரகம் - 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
இரவே அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, காலையில் மாவு அரைத்து வைத்து விட்டால், இரவு டிபனுக்கு தயாரிக்கலாம். முதலில், பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அத்துடன் நறுக்கிய தக்காளிகளையும் சேர்த்து அரைக்கவும். குறைந்த தண்ணீர் விட்டு, ஊறின அரிசி, உளுந்து, வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். நன்கு மசிந்ததும், தக்காளி - மிளகாய் போன்றவற்றை அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு அரைக்கவும். (ரவா தோசை மாவு போல நீர்க்க இருக்க வேண்டும்). சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி ஆகியவை மாவில் சேர்த்து, 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
ரவா தோசை போல, ஓரத்திலிருந்து மாவு ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, ரோஸ்ட்டாக வார்த்து எடுக்கவும். மிகவும் ருசியான, லைக்கோபீன் நிறைந்த தக்காளி தோசைகளை, வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.