இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே, எப்போதும்
கைகழலா நேமியான், நம்மேல் வினைகடிவான்
மொய்கழலே ஏத்த முயல்.
என் நெஞ்சே,
இப்போது கேட்டாலும் சரி, இன்னும் சிறிதுநேரம் கழித்துக் கேட்டாலும் சரி, எப்போதும் நான் உனக்குச் சொல்லும் அறிவுரை ஒன்றுதான்,
எந்த நேரத்திலும் கையைவிட்டு அகலாத சக்ராயுதத்தை ஏந்தியவன், நம் வினைகளைப் போக்குபவன், எம்பெருமான், எப்போதும் அவனது அழகிய திருவடிகளைப் போற்றிக்கொண்டிரு!