இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி - பாடல் 7, 8

பிரளய காலத்தில் வராக அவதாரம்

நலம்என நினைமின் நரகு அழுந்தாதே,
நிலம் முனம் இடந்தான் நீடுஉறை கோயில்,
மலம்அறு மதிசேர் மாலிருஞ்சோலை
வலம்முறை எய்தி மருவுதல் வலமே.

தீயவற்றைச் செய்து நரகத்தில் அழுந்தாதீர்கள், உங்களுக்கு நன்மைதரும் (இந்த) விஷயத்தை எண்ணிப்பாருங்கள், குற்றமில்லாத சந்திரன் சேர்கிற திருமாலிருஞ்சோலையில், முன்பு பிரளய காலத்தில் வராக அவதாரம் எடுத்து பூமியை இடந்து கொண்டுவந்து காத்த எம்பெருமான் நிரந்தரமாகக் கோயில்கொண்டிருக்கிறான், அந்தத் திருமாலிருஞ்சோலையை முறைப்படி வலம் வாருங்கள், அங்கேயே அவனோடு கலந்துவிடுங்கள், அதுவே உங்களுக்குச் சிறப்பைத்தரும்.

***

பாடல் - 8

வலம்செய்து வைகல் வலம்கழியாதே
வலம்செயும் ஆய மாயவன் கோயில்
வலம்செயும் வானோர் மாலிருஞ்சோலை
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே.

தினந்தோறும் வீணானவற்றை (உலக இன்பங்களை)ச் சுற்றிவந்து உங்கள் வலிமையை இழக்காதீர்கள், தேவர்கள் பக்தியோடு சுற்றிவருகிற திருமாலிருஞ்சோலையிலே, நமக்குப் பலத்தை வழங்கக்கூடிய மாயவன் கோயில் கொண்டிருக்கிறான், அந்தத் திருத்தலத்தை ஒவ்வொருநாளும் வலம்வந்து வணங்குங்கள், அவனோடு கலந்துவிடுங்கள், அதுவே சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com