பாடல் - 9
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன்
நான் ஒன்று இலேன்,
நீர்த்திரைமேல் உலவி இரை தேடும் புதா இனங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன், விண்ணவர்
கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல்
வந்திருந்தே.
நீரலைகள்மேல் சென்று இரை தேடுகின்ற பெருநாரைக் கூட்டங்களே, கார்காலத்திலே திரள்கிற பெரிய மேகத்தைப்போன்ற கண்ணன், வானோர் தலைவன், அவனைக் கண்டு, அவனுடைய சொற்களைக் கேளுங்கள், பின்னர் இங்கே வந்து அந்தச் சொற்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள், தீவினை செய்தவளான எனக்கு, அந்தப் பெருமானைத்தவிர வேறு பற்றுக்கோடு இல்லை.
***
பாடல் - 10
வந்து இருந்து உம்முடைய மணிச்சேவலும்
நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும்
அன்னங்காள்,
என் திருமார்வற்கு என்னை, இன்னவாறு இவள்,
காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே.
பெண் அன்னங்களே, உங்கள் துணைகளான அழகிய ஆண் அன்னங்களுடன் நீங்கள் எல்லாரும் இடையூறு இல்லாமல் மலர்களின்மீது வாழ்கிறீர்கள், திருமகளை மார்பிலே கொண்ட எம்பெருமானைச் சென்று காணுங்கள், அவர் தனியே இருக்கும்போது ரகசியமாக, ‘இவள் உங்களை எண்ணி இவ்வாறு ஆனாள், இதைக் காணுங்கள்’ என்று என் நிலைமையைச் சொல்லுங்கள், அவர் சொல்லும் பதிலை இங்கே வந்து சொல்லுங்கள்.