பாடல் - 11
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்
என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழன
குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு
இவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய
வானுள் நிலாவுவரே.
எம்பெருமான் தன் அடியவர்களிடம், ‘என்னுடைய திருவடிகளில் அமர்ந்து, புகுந்து வாழுங்கள்’ என்று அருள்கொடுக்கிறான், அருள்மழை பொழிவதில் தனக்கு நிகராக யாருமில்லாத அந்தப் பெருமானை, வயல்கள் சூழ்ந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அப்பாடல்கள் உலக வாழ்வின் துயரங்களை முடித்துவைக்கக்கூடியவை, அவற்றுள் இந்தப் பத்து திருப்பாடல்களும் திருவேங்கடத்தைப்பற்றியவை. இப்பாடல்களைக் கற்றவர்களைப் பற்றிக்கொண்டவர்கள் பெரிய வானுலகில் வீற்றிருந்து நிலவுவார்கள்.