வேவுஆரா வேட்கைநோய் மெல்ஆவி உள்உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்துஒழித்தாய்,
மா வாய் பிளந்து மருதுஇடைபோய் மண்அளந்த
மூவா, முதல்வா, இனிஎம்மைச் சோரேலே.
குதிரையாக வந்த கேசி என்ற அசுரனின் வாயைப் பிளந்து, மருதமரங்களின் இடையே போய் அவற்றை முறித்து, வாமனனாக வந்து மண்ணளந்தவனே, மூப்படையாத முதல்வனே,
நீ தந்த காதல் நோயால் நாங்கள் வேகிறோம், எங்களை எவ்வளவுதான் வேகச் செய்த பிறகும் திருப்தியடையாத அந்த நோய் எங்களுடைய மென்மையான ஆவியை உள்ளிருந்து உலர்த்தியது, ஓயாமல் இரவும் பகலும் உன்னிடத்தில் ஈடுபடுத்தியது, ஆனால், நீ எங்களை உன்னோடு இணைத்துக்கொள்ளவில்லை.
எம்பெருமானே, இனியும் எங்களைச் சோரவைக்காதே, (உன்னுடன் இணைத்துக்கொள்.)