பிராஅன், பெருநிலம் கீண்டவன், பின்னும்
விராஅய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்,
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான்எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?
எம்பெருமான் பிரளய வெள்ளத்திலிருந்து பூமியை மீட்டவன், நறுமணம்மிகுந்த துளசிமாலைகளைச் சூடிய திருமுடியைக் கொண்டவன், மராமரங்களை அம்பினால் துளைத்த மாயவன், அவன் என்னுள் இருக்கமாட்டேன் என்று சொன்னால் நான் சம்மதிப்பேனா? (மாட்டேன்!)