அம்தாமத்து அன்புசெய்து என் ஆவிசேர் அம்மானுக்கு
அம்தாமம், வாழ்முடி, சங்கு, ஆழி, நூல், ஆரம் உள,
செந்தாமரைத் தடம்கண், செங்கனிவாய் செங்கமலம்,
செந்தாமரை அடிகள், செம்பொன் திருஉடம்பே.
எம்பெருமான் பரமபதத்தின் மீது வைக்கிற அன்பை என்மீது வைத்தான், என் உயிரிலே கலந்தான், அழகிய மாலை, திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை சூடிய அப்பெருமானின் கண்கள் செந்தாமரை போன்றவை, கனியிதழ்களும் செந்தாமரை போன்றவை, திருவடிகளும் செந்தாமரை போன்றவை, அவன் திருமேனியோ செம்பொன்னாகவே திகழ்கிறது. அவனுடைய அழகை என்னென்பேன்!