பாம்புஅணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்புஅணைதோள் பின்னைக்காய் ஏறுடன்ஏழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடி அம் போர்ஏறே.
பாற்கடலிலே பாம்புப் படுக்கையில் திருத்துயில் கொண்டவன், மூங்கில் போன்ற தோள்களையுடைய நப்பின்னைக்காக ஏழு எருதுகளுடன் போர்செய்து வென்றவன், தேன்சொரியும் மலர்கள், கிளைகளைக்கொண்ட சோலைபோல் வளர்ந்துநின்ற ஏழு மராமரங்களையும் ஓர் அம்பு எய்து துளைத்தவன், அழகாகத் தொடுக்கப்பட்ட, குளிர்ச்சியான துளசிமாலையை அழகிய திருமுடியிலே அணிந்தவன், எங்கள் தலைவன், போர் எருதுபோன்ற சிறப்புடைய பெருமான்.