செய்ய தாமரைக்கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்,
வய்யம், வானம், மனிசர், தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ்சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவைபடத் தான் பினும்
மெய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.
செந்தாமரைக் கண்களை கொண்டவன், பிரளயத்தின்போது ஏழு உலகங்களையும் உண்டு அவற்றைக் காத்தவன், ஒப்பற்ற மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறவன் எம்பெருமான், அவனை அறிந்துகொள்ளுங்கள், இந்த உலகம், வானம், மனிதர், தெய்வம், மற்ற அனைத்தையும் படைத்தவன் அவனே, அவற்றைச் சூழ்ந்திருக்கிற சிறந்த ஞானச்சுடர்வடிவமாகத் தோன்றுகிறவன், அதற்குமேலும், செறிந்த ஒளிவடிவமான பரமபதத்தோடு கூடியிருக்கிறான்.
***
பாடல் - 2
மூவர்ஆகிய மூர்த்தியை, முதல்
மூவர்க்கும் முதல்வன்தன்னை,
சாவம் உள்ளன நீக்குவானை,
தடம்கடல் கிடந்தான்தன்னை,
தேவ தேவனை, தென்இலங்கை
எரி எழச் செற்ற வில்லியை,
பாவநாசனை, பங்கயத் தடம்
கண்ணனைப் பரவுமினோ.
மும்மூர்த்திகளாகவும் திகழ்கிற மூர்த்தி, அவர்கள் மூவருக்கும் காரணமாகத் திகழும் முதல்வன், அவர்களுடைய சாபங்களைப் பொறுத்துக்கொண்டு நீக்குபவன், பெரிய பாற்கடலிலே கண்வளர்கிறவன், தேவர்களின் தலைவன், தென் இலங்கை நெருப்புக்கு இரையாகும்படி அதனை வென்ற வில்வீரன், நம் பாவங்களை நாசம் செய்கிறவன், தாமரைபோன்ற பெரிய கண்களைக் கொண்டவன், அவனைப் போற்றி வணங்குவோம்.