பாடல் - 3
நிறம் கரியானுக்கு, நீடு உலகு உண்ட
திறள்கிளர் வாய்ச் சிறு கள்வன் அவற்கு,
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே.
கருநிறத்தவன், பெரிய உலகையே உண்ணுமளவு திறன்கொண்ட, சிறந்த திருவாயைக்கொண்ட சிறு கள்வன், சுழலுகின்ற சக்கரத்தைக்கொண்ட திருக்கையையுடையவன், அத்தகைய பெருமானை எண்ணி, நீண்ட கூந்தலையுடைய என் மகள் தன் பெருமையை இழந்துவிட்டாள்.
***
பாடல் - 4
பீடுஉடை நான்முகனைப் படைத்தானுக்கு,
மாடுஉடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுஉடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு என்
பாடுஉடை அல்குல் இழந்தது பண்பே.
பெருமை நிறைந்த பிரம்மனைப் படைத்தவன், செல்வம் நிறைந்த உலகத்தை அளந்த மணாளன், உலகை ஆளும் மன்னர்களான பாண்டவர்களுக்காகத் தூது சென்ற நம்பி, அத்தகைய பெருமானை எண்ணி, பரந்த அல்குலையுடைய என் மகள் தன்னுடைய இயல்புத்தன்மையை இழந்துவிட்டாள்.