பாடல் - 9
மாண்பு அமை கோலத்து எம் மாயக்குறளற்கு,
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.
சிறப்பு நிறைந்த அழகையுடைய எங்கள் மாயன், வாமனன், உயர்ந்த சுடர்க்குன்றைப்போன்ற செஞ்சுடர் மூர்த்தி, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய எங்கள் காகுத்தன், ஆண்களில் சிறந்தவன், அத்தகைய பெருமானை எண்ணி, ஆபரணங்களை அணிந்த, மென்மையான மார்பகங்களைக்கொண்ட என் மகள் தன் அழகை இழந்துவிட்டாள்.
***
பாடல் - 10
பொற்பு அமை நீள்முடிப் பூந்தண் துழாயற்கு,
மல் பொரு தோள் உடை மாயப்பிரானுக்கு,
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்புடையாட்டி இழந்தது கட்டே.
அழகிய, நீண்ட திருமுடியிலே, அழகான, குளிர்ந்த துழாய்மாலையை அணிந்தவன், மல்லர்களோடு போர்செய்யவல்ல தோள்களைக்கொண்ட மாயப்பிரான், நிற்கின்ற பலப்பல உருவங்களாகவும் தானே நிற்கிற மாயன், அத்தகைய பெருமானை எண்ணி, அறிவுடையவளான என் மகள் தன் மரியாதையை இழந்துவிட்டாள்.