பாடல் - 5
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத்து
உள்ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே,
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீவர
மங்கலநகர்
கைதொழ இருந்தாய், அது நானும் கண்டேனே.
எப்படிப்பட்ட பகைவர்களின் கூட்டங்களிலும் சென்று, அவர்களுக்கு எதிராக வஞ்சகம் புரிகின்ற பெருமானே, கருத்த திருமேனி கொண்ட அம்மானே, உன்னை அழைத்துக் கூவும் தகுதி எனக்கு உண்டா? வேள்விகளைப் புரிகிறவர்கள், பூலோகத்துத் தேவர்களான வைணவர்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, அனைவரும் கை
கூப்பித் தொழும்படி திகழ்பவனே, உன் பெருமையை நான் கண்டேனே.
******
பாடல் - 6
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே, கண்ணா, என்றும்
என்னை ஆளுடை
வான நாயகனே, மணி மாணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர்
கைதொழ உறை
வானமாமலையே, அடியேன் தொழ வந்தருளே.
வராக அவதாரமெடுத்து நிலத்தை எடுத்த என் அப்பனே, கண்ணா, என்றைக்கும் என்னை ஆளுகின்ற வான நாயகனே, அழகிய மாணிக்கச்சுடரே, தேன் நிரம்பிய மாமரச்சோலைகள் நிறைந்த, குளிர்ந்த, ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி, அங்குள்ள எல்லாரும் கை கூப்பித் தொழும்படி இருக்கும் வானமாமலையே, நான் தொழும்படி வந்தருள்வாய்.