பாடல் - 9
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும்
அம்மானே,
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா, ஆதிப் பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழு மாமணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய், காண வாராயே.
என்னை உடன்படச்செய்து உன்னுடைய திருவடிகளில் இருத்தும் அம்மானே, அழியாத அமரர்களின் தலைவருக்குத் தலைவா, அனைத்துக்கும் முதலான பெருமூர்த்தியே, எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் செழுமையான, சிறந்த மணிகள் சேர்கிற திருக்குடந்தையிலே, உலகம் வருத்தமின்றிப் போற்றும்படி, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிறவனே, நான் காணும்படி வரவேண்டும்.
******
பாடல் - 10
வாரா அருவாய் வரும் என் மாயா, மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய், திருக்குடந்தை
ஊராய், உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம்
உழல்வேனோ?
வெளிக்கண்களால் காண இயலாதபடி அருவ வடிவில் தோன்றுகின்ற என் மாயனே, என்றைக்கும் அழியாத திருமேனியைக்கொண்டவனே, தெவிட்டாத அமுதமாக என்னுடைய உயிருக்குள்ளே தித்திப்பவனே, தீராத வினைகளெல்லாம் தீரும்படி என்னை ஆண்டவனே, திருக்குடந்தையை ஊராகக் கொண்டவனே, உனக்கு ஆட்பட்டபிறகும் நான் இன்னும் இங்கே உழன்று துன்புறுவேனா?