ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

பம்பையின் வடகரையில்
ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்குஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன்தனை, கண்ணனை, நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாமரையில் தங்கியிருக்கும் அன்னங்களே, விடியலைக் குறிக்கும் சங்குகள் ஒலிக்கின்ற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருப்பவன், கடுமையான மாயச்செயல்களைப் புரிகிறவன், கண்ணன், நெடுமால், அப்பெருமானைக் காணுங்கள், கைகூப்பி வணங்குங்கள், அவர் தனியாக இருக்கும்போது, கொடிய, வலிமையான வினைகளைச் செய்தவளான என்னுடைய தன்மையை அவருக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 10

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்,
                                                                      வெறிவண்டினங்காள்,
தேறு நீர்ப்பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளல் என்மின்களே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) வாசனைமிக்க வண்டுக்கூட்டங்களே, உங்களிடம் நான் தனியாகக் கெஞ்சிக் கேட்கிறேன், எனக்கு
ஓர் உதவி செய்யுங்கள், தெளிவான நீரைக்கொண்ட பம்பையின் வடகரையில் உள்ள திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், போர் செய்வதில் தனக்கு எதிரிகள் யாரும் இல்லாத அரக்கனான ராவணனின் மதிள்களைப் பொடிப்பொடியாக்கி வென்று மகிழ்ந்தவன், பெரிய வீரனான திருமாலிடம் பேசுங்கள், ‘இப்படி ஒருத்தி உங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள்’ என்று அவருக்குச் சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com