பாடல் 11
நேர்பட்ட நிறை மூ உலகுக்கும்
நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள்
இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு
அடிமை செய்யவே.
நிறைந்த மூன்று உலகங்களுக்கும் வாய்த்த நாயகன் எம்பெருமான், அவனுடைய அடிமையாகும் தகுதியைக்கொண்ட தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன். அந்தச் சடகோபன் சொன்ன தமிழ்மாலை ஆயிரத்திலே இந்தப் பத்து பாடல்களையும் யார் பயில்கிறார்களோ, அவர்கள் நெடுமாலுக்கு அடிமையாகும் சிறப்பைப் பெறுவார்கள்.