பாடல் 2
தகவு இலை, தகவு இலையே நீ, கண்ணா,
தட முலை புணர்தொறும், புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து, அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து, அது கனவு என நீங்கி, ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள்புக்கு,
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ,
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்,
வீவ, நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.
கண்ணா, நீ செய்வது நியாயமில்லை, நியாயமில்லை. என்னுடைய பெரிய மார்பகங்களை அணைத்துக் கலக்கிறாய், அந்தக் கலவியின் தீராத சுக வெள்ளம் வானைக் கடந்து அறிவை மூழ்கடித்துச் சூழும்போது, அது கனவு என்பதுபோல் நீ நீங்கிச் செல்கிறாய். உயிரின் உள்ளே உள்ளே புகுந்து தாங்கமுடியாத ஆசை பெருகுகிறது, அடடா, இப்படி உன்னை நான் மிகுதியாகப் பிரிந்து வாடும்படி நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்கிறாய். இனி அப்படிச் செல்லாதே.