பாடல் 7
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு,
வெள் வளை, மேகலை கழன்று வீழ,
தூமலர்க் கண் இணை முத்தம் சோர
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மாமணிவண்ணா, உன் செங்கமல
வண்ண மெல் மலர் அடி நோவ, நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப்பெயில் எவன்கொல் ஆங்கே.
சிறந்த மணியைப்போன்ற வண்ணம் கொண்ட பெருமானே, உன்னுடைய சிவந்த தாமரையைப்போன்ற அழகிய, மென்மையான மலர்த் திருவடிகள் நோகும்படி நீ சென்று பசுக்களை மகிழ்ச்சியோடு மேய்க்கிறாய், உன்னைப் பிரிந்து எங்களுடைய உயிர் நெருப்பிலே இட்ட மெழுகுபோல் உருகி வேகிறது, வெண்மையான வளையல்கள், மேகலை கழன்று விழுகின்றன, தூய்மையான மலர்களைப் போன்ற இரு கண்களிலும் கண்ணீர் முத்துகள் சொட்டுகின்றன, இரு மார்பகங்களிலும் பசலை படர்கிறது, தோள்கள் வாடுகின்றன. எம்பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லும்போது அசுரர்கள் அங்கே வந்து உன்னோடு போரிட்டால் என்ன ஆகுமோ! (இதை எண்ணியும் நாங்கள் வருந்துகிறோம்.)