பாடல் - 11
கட்கு அரிய பிரமன், சிவன், இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே.
மக்களால் காண அரியவர்களாகிய பிரமன், சிவன், இந்திரன் போன்றோராலும் கண்ணனைக் காண இயலாது. அத்தகைய பெருமானைக் குருகூர்ச் சடகோபன் பாடிய மதிப்புமிகுந்த ஆயிரம் திருப்பாடல்களிலே, இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள், மதிப்பு மிகுந்த வானவர்களோடு என்றைக்கும் எம்பெருமானைப் பிரியாமல் சேர்ந்திருப்பார்கள்.