பாடல் - 5
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.
எம்பெருமானின் சிறப்புகளைக் கண்டுகொண்டு, அவற்றைத் திருத்தமான, நல்ல, இனிய கவிகளாக நேர்த்தியுடன் சொல்லும் தன்மை எனக்கு இல்லை. ஆகவே, தகுதியில்லாத என்னைத் தன்னாக்கினான், என்னால் தன்னைப் பாடிக்கொண்டான், அதன்மூலம் உலகமே தன்னைப் போற்றும்படி செய்தான். அவ்வாறு இனிமையான கவிகளை என்மூலம் பாடிக்கொண்ட பரமன், எம்பெருமான்.
***
பாடல் - 6
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.
இனிய கவிதைகளைப் பாடும் பரம கவிகள் பலர் உள்ளார்கள். அவர்களைக்கொண்டு எம்பெருமான் தன்னைப் பாடுவித்துக்கொள்ளவில்லை. இன்று, நல்ல முறையில் வந்து, என்னைக் கருவியாக்கிக்கொண்டு, என்னால் தன்னைச் சிறந்த பாசுரங்களால் பாடிக்கொள்கிறான் என் வைகுந்தநாதன்.