பாடல் - 1
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ, அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ, அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே.
எம்பெருமான் திரிவிக்கிரமனாக அவதாரமெடுத்து உலகை அளந்தபோது, முதலில் அவனுடைய திருச்சக்கரம் தோன்றியது, பின்னர் சங்கும் வில்லும் தோன்றின, திசையெங்கும் ‘வாழ்க, வாழ்க’ என்று வாழ்த்தொலி எழுந்தது, பின்னர் தண்டும் வாளும் எழுந்தன, எம்பெருமானின் திருமுடியும் திருப்பாதமும் அண்டத்தின் உச்சியையும் அடிப்பகுதியையும் எட்டிக் குமிழிகள் உண்டாகின, இப்படி அற்புதமானமுறையில் உலகை அளந்தான் பெருமான்.
***
பாடல் - 2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி, அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி, கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி, அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.
எம்பெருமான், நம் அப்பன் பாற்கடலைக் கடைந்து அமுதத்தைக் கொண்டுவந்தபோது, தேவர்கள் அதனைத் திருவிழாவைப்போல் கொண்டாடினார்கள், அப்போது என்னென்ன ஒலிகள் கேட்டன, தெரியுமா? ஆறுகள் அனைத்தும் தாம் பிறந்துவந்த மலைகளை எதிர்த்து ஓடுகிற ஒலி கேட்டது, வாசுகி என்கிற பாம்பின் உடலைச் சுற்றி மலையானது தேய்க்கிற ஒலி கேட்டது, கடல் தன்னுடைய தன்மை மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலி கேட்டது. இப்படி அற்புதமானமுறையில் பாற்கடலைக் கடைந்தான் பெருமான்.