ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

அமரர்களின் சிங்கமான
ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10


பாடல் - 9

காண்டும்கொலோ நெஞ்சமே, கடிய
                           வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன்     
                          குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரிநீர்
                         இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி
                        ஏற்றினையே?

தீய தொழிலையே செய்கிற, ஆண்மை மிகுந்த, சிங்கம்போல் வலிமையான ராவணனின் அரக்கர் குலத்தை அழித்தவன் எம்பெருமான், பின்னர் அந்த ராவணனின் தம்பிக்குக் கடல் சூழ்ந்த இலங்கையை அருளினான், அயோத்தியைப் பலப்பல ஆண்டுகள் ஆட்சிசெய்தான், பின்னர் தன்னுடைய சோதிக்கே எழுந்தருளினான், நெஞ்சமே, அமரர்களின் சிங்கமான அந்தப் பெருமானை நாம் காண இயலுமோ?

***

பாடல் - 10

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு,
                                          ஆயர்குலத்து
ஈன்ற இளம்பிள்ளை ஒன்றாய்ப் புக்கு,
                                          மாயங்களே இயற்றி,
கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று, ஐவர்க்காய்க்
                                          கொடும்சேனை தடிந்து
ஆற்றல்மிக்கான் பெரிய பரம்சோதி
                                          புக்க அரியே.

கண்ணன் ஆயர்குலத்திலே இளம்பிள்ளையாகப் பிறந்தான், பல மாயங்கள் செய்தான், எமனைப்போன்ற கம்சனைக் கொன்றான், பாண்டவர் ஐவருக்காகக் கொடிய சேனையை அழித்தான், ஆற்றலோடு பெரிய பரம்பதத்திலே புகுந்தான், யாராலும் தானே ஏற இயலாத பரமபதத்தை அவன் நமக்கு அருள்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com